Thiruvarthai Thiruvasagam

  

                                                           திருவார்த்தை


திருச்சிற்றம்பலம்


மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் 

  மாமலர் மேயசோதி

கோதில் பரங்கருணையடியார் குலாவு

  நீதி குண மாகநல்கும்

போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் 

  மண்ணிடை வந்திழிந்து

ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி 

  வார் எம்பிரானாவாரே.  1 


மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க 

  அவர்க்கருள் செய்தஈசன்

ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி 

  காட்டி நலம்திகழும்

கோல மணியணி மாடநீடு குலாவு 

  மிடைவை மடநல்லாட்குச்

சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி 

  வார்எம் பிரானாவாரே.  2 


அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் 

  கூத்தன் அறுசமயம்

பணிவகை செய்து படவதேறிப் பாரொடு 

  விண்ணும் பரவியேத்தப்

பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு 

  ளாளன்பெண் பாலுகந்து

மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி

  வார் எம்பிரானாவாரே.  3 


வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை 

  வானவர் வந்துதன்னைத்

தேட இருந்த சிவபெருமான் சிந்தனை 

  செய்தடி யோங்களுய்ய

ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் 

  பெருந்துறை ஆதிஅந்நாள்

ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி 

  வார்எம் பிரானாவாரே.  4 


வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு 

  ணைக்கட லாய்அடியார்

பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன் 

  பெருந்துறை ஆதி அந்நாள்

உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு 

  மதிலிலங்கை அதனில் 

பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசறி 

  வார்எம் பிரானாவாரே.  5 


வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ

  னாய்க்கடி நாய்கள்சூழ

ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு

  மான்தான் இயங்கு காட்டில்

ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை 

  பெருந்துறை ஆதியன்று

கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி 

  வார்எம் பிரானாவாரே.  6 


நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் 

  நண்ணிய நன்னுதலார்

ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் 

  சோதியெம் ஈசன் மன்னும்

போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் 

  மண்ணிடை வந்து தோன்றிப்

பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் 

  லார்எம் பிரானாவாரே.  7 


பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர் 

  வன்புலி கொன்றவீரன்

மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் 

  சூழ்தென் பெருந்துறைக்கோன்

ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் 

  வாணற்குத் தீயில்தோன்றும்

ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி 

  வார்எம் பிரானாவாரே.  8 


தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி 

  மகேந்திர நாதன்வந்து

தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் 

  பெருந்துறை யாளிஅன்று

காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் 

  காட்டிக் கசிந்துருகக்

கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி 

  வார்எம் பிரானாவாரே.  9 


அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் 

  கமுதன் அவனிவந்த

எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் 

  ஆயதோர் இன்பமெய்தச்

சங்கங் கவர்ந்து வண் சாத்தினோடுஞ் சதுரன் 

  பெருந்துறை யாளிஅன்று

மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி 

  வார்எம் பிரானாவாரே.  10 

  

திருச்சிற்றம்பலம்

Powered by Blogger.