Thirupandi Pathigam Thiruvasagam

                                                திருப்பாண்டிப்பதிகம்


திருச்சிற்றம்பலம்


பருவரை மங்கைதன் பங்கரைப் 

  பாண்டியற் காரமுதாம்

ஒருவரை ஒன்றுமில்லாதவ 

  ரைக்கழற் போதிறைஞ்சித்

தெரிவர நின்றுருக் கிப்பரி 

  மேற்கொண்ட சேவகனார்

ஒருவரை யன்றி உருவறி

  யா தென்றன் உள்ளமதே.  1 


சதுரை மறந்தறி மால்கொள்வர் 

  சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்

கதிரை மறைத்தன்ன சோதி 

  கழுக்கடை கைப்பிடித்துக்

குதிரையின் மேல்வந்து கூடிடு 

  மேற்குடி கேடுகண்டீர்

மதுரையர் மன்னன் மறுபிறப் 

  போட மறித்திடுமே.  2 


நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் 

  குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்

பாரின்ப வெள்ளங் கொளப்பரி 

  மேற்கொண்ட பாண்டியனார்

ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு 

  தொண்டரை உள்ளங் கொண்டார்

பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ 

  லேசென்று பேணுமினே.  3 


செறியும் பிறவிக்கு நல்லவர்

  செல்லன்மின் தென்னன் நன்னாட்டு

இறைவன் கிளர்கின்ற காலமிக் 

  காலம் எக் காலத்துள்ளும்

அறிவொண் கதிர்வாள் உறைகழித் 

  தானந்த மாக்கடவி

எறியும் பிறப்பை எதிர்ந்தார் 

  புரள இருநிலத்தே.  4 


காலமுண்டாகவே காதல்செய்   

 துய்மின் கருதரிய

ஞாலமுண்டானொடு நான்முகன் 

 வானவர் நண்ணரிய

ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்

  பிரான்தன் அடியவர்க்கு

மூலபண்டாரம் வழங்குகின்

  றான்வந்து முந்துமினே.  5 


ஈண்டிய மாயா இருள்கெட 

  எப்பொரு ளும் விளங்கத்

தூண்டிய சோதியை மீனவ

  னுஞ் சொல்ல வல்லன் அல்லன்

வேண்டிய போதே விலக்கிலை 

  வாய்தல் விரும்புமின்தாள்  

பாண்டிய னாரருள் செய்கின்ற 

  முத்திப் பரிசிதுவே.  6 


மாய வனப்பரி மேல்கொண்டு 

  மற்றவர் கைக்கொளலும்

போயறும் இப்பிறப் பென்னும் 

  பகைகள் புகுந்தவருக்

காய அரும்பெருஞ் சீருடைத் 

  தன்னருளே அருளுஞ்

சேய நெடுங்கொடைத் தென்னவன் 

  சேவடி சேர்மின்களே.  7 


அழிவின்றி நின்றதோர் ஆனந்த 

  வெள்ளத் திடையழுத்திக்

கழிவில் கருணையைக் காட்டிக் 

  கடிய வினையகற்றிப்

பழமலம் பற்றறுத் தாண்டவன் 

  பாண்டிப் பெரும்பதமே

முழுதுல குந்தரு வான்கொடை 

  யேசென்று முந்துமினே.  8 


விரவிய தீவினை மேலைப் 

  பிறப்புமுந் நீர்கடக்கப்

பரவிய அன்பரை என்புருக் 

  கும்பரம் பாண்டியனார்

புரவியின் மேல்வரப் புந்திக் 

  கொளப் பட்ட பூங்கொடியார்

மரவியல் மேல்கொண்டு தம்மையும் 

  தாம் அறியார் மறந்தே.  9 


கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் 

  வென்றிருந்தழகால்

வீற்றிருந் தான்பெருந் தேவியுந் 

  தானும் ஓர் மீனவன்பால்

ஏற்றுவந் தாருயி ருண்ட 

  திறலொற்றைச் சேவகனே

தேற்றமிலாதவர் சேவடி 

  சிக்கெனச் சேர்மின்களே.  10 

  

திருச்சிற்றம்பலம்

Click here to play

Powered by Blogger.