Pandaaya Nanmarai Thiruvasagam

                                                        பண்டாய நான்மறை


திருச்சிற்றம்பலம்


பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்

கண்டாரு மில்லை கடையேனைத்- தொண்டாகக்

கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே

உண்டாமோ கைம்மா றுரை.  1 


உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த- வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவுங் கெடும்பிறவிக் காடு.  2 


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்

நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி

அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்

மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.  3 


வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்- சூழ்ந்தமரர்

சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை

நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.  4 


நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல

எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்

மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்

கழியா திருந்தவனைக் காண்.  5 


காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு.  6 


பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணிவார்த்தை - பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தினடி என்மனத்தே வைத்து.  7 

  

திருச்சிற்றம்பலம்

Click here to play

Powered by Blogger.