Arputha Pathu Thiruvasagam

 அற்புதப்பத்து


திருச்சிற்றம்பலம்


மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்  

  ஆழியு ளகப்பட்டுத்

தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் 

  தலைதடு மாறாமே

பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் 

  பொன்னடி யிணைகாட்டி

மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் 

  அற்புதம் விளம்பேனே.  1 


ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் 

  இயல்பொடும் வணங்காதே

சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் 

  தலைதடு மாறாகிப்

போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து 

  பொற்கழலிணைகாட்டி

வேந்த னாய் வெளியே என்முன் நின்றதோர் 

  அற்புதம் விளம்பேனே.  2 


நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து 

  நானென தெனும்மாயக்

கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் 

  கழறியே திரிவேனைப்

பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய 

  அரும்பொருள் அடியேனை

அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய 

  அற்புதம் அறியேனே.  3 


பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது 

  பொய்களே புகன்றுபோய்க்

கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு 

  கலங்கியே கிடப்பேனைத்

திருந்து சேவடிச் சிலம்பவை 

  சிலம்பிடத் திருவொடும் அகலாதே

அருந்து ணைவனாய் ஆண்டுகொண் 

  டருளிய அற்புதம் அறியேனே.  4 


மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் 

  மங்கையர் தம்மோடுங்

கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு 

  குலாவிய திரிவேனை

வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட 

  மென்மலர்க் கழல்காட்டி

ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் 

  அற்புதம் அறியேனே.  5 


வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது  

  மங்கையர் தம்மோடும்

பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் 

  தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்

குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் 

  கோமளத் தொடுங்கூடி

அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய 

  அற்புதம் அறியேனே.  6 


இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் 

  இயல்பொடஞ் செழுத்தோதித்

தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் 

  தடமுலை யார்தங்கள்

மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை  

  மலரடி யிணைகாட்டி

அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய 

  அற்புதம் அறியேனே.  7 


ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின 

  இருவினை அறுத்தென்னை

ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் 

  உணர்வுதந் தொளியாக்கிப்

பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் 

  பரம்பெருங் கருணையால்

ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய 

  அற்புதம் அறியேனே.  8 


பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் 

  புழுத்தலை நாய்போல

இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் 

  கிணங்கியே திரிவேனை

இச்ச கத்தரி அயனுமெட் டாததன் 

  விரைமலர்க் கழல்காட்டி

அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய 

  அற்புதம் அறியேனே.  9 


செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது 

  செறிகுழலார் செய்யுங்

கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் 

  உன்னியே கிடப்பேனை

இறைவன் எம்பிரான் எல்லையில் 

  லாததன் இணைமலர்க் கழல்காட்டி

அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய 

  அற்புதம் அறியேனே.  10 

  

திருச்சிற்றம்பலம்

Powered by Blogger.